Thursday, March 24, 2011

நம்முடன் நாம் :-)

அன்பு வணக்கங்களுடன் மறுபடியும் நான் ...

சென்ற வாரத்தின் இறுதி நாட்கள் ...மறக்க முடியாதவை. என்னால் எனக்கு ஏற்ற மனநிலையோடு நானாக இருக்க முடிகின்ற ஒரு சூழ்நிலை.. அமைத்துக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி..

நான் புரிந்து கொண்ட, எனக்காக மட்டுமல்லாது நம்மில் பலருக்காகவும் நான் வருத்தப்பட்ட ஒரு உண்மை... நம்மில் பலரும் நம் ஒவ்வொருவருடைய சூழ்நிலைகளுக்காகவும் நம்முடைய சுயத்தை, நாம் என்ற அடையாளத்தை இழந்தும், பல இடங்களில் தெரிந்தே தொலைத்தும் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் நம்முடைய தேவைகள் என்ன ?
நம் உள்மனதிற்கு விடை தெரிந்தும் அதை மௌனிக்க பணித்திருக்கிறோம். அறிவும் மனதும் மாற்று பாதையில் செல்ல விரும்பும்போது, நமக்கான உள்ளுணர்வுகள் நம்மை நம் மனதை நோக்கிச் செல்ல அழைத்தாலும் கூட, விரும்பியோ விரும்பாமலோ நம் எண்ணங்களை புதைத்துக்கொண்டு அறிவின் பாதையில் செல்வதாய் நம்மை நாமே தேற்றிக்கொண்டு நம்முடைய மனதை நாமே கொன்றுபுதைக்கிறோம்.

நாம் நம் சமூகத்தை சார்ந்து இருக்கவேண்டிய கட்டாயத்தினால் இந்த நிலை ஏற்படுவதாய் நினைத்துக்கொள்கிறோம் . நம்முடைய வாழ்க்கையை தீர்மானிக்க நம்மை தவிர வேறு எவருக்கும் எந்த உரிமையும் இல்லாத பொழுது , அந்த உரிமையை சமூகத்திடமும் ஏனைய பிறரிடமும் கொடுத்தது, கொடுத்ததாய் நினைத்துக்கொண்டிருப்பது நம்முடைய தவறு... இயலாமை...இதை முதலில் நாம் உணரவேண்டும் ....

மற்றோர் உயிரை உணர்வை காயப்படுத்துவது எந்த அளவிற்கு தவறோ, நம்முடைய உயிருள்ள உணர்வுகளை, மனதை, உரிமைகளை பிறருக்காகவோ பிறவற்றிற்காகவோ சிதைத்துக்கொள்வதும் அதே அளவிற்கு, மிகப்பெரிய குற்றம். நம்மை முழுதாக நாமாக உணரமுடியாத ஒரு பணியில், சூழ்நிலையில், வாழ்க்கையில் பயணிப்பது தற்கொலைக்கு சமமானதல்லவா ! இதை அறிந்தும் நம்மில் பலர் ஏதோ ஒரு சூழ்நிலையில் இந்த இழிநிலையில் நம்மை ஈடுபடுத்திக்கொள்கிறோம்.

இனியேனும், நமக்காக வாழத்துவங்குவோம்.. சமூகம், குடும்ப அமைப்பு, உறவுகள், நண்பர்கள், பணம், பதவி, புகழ், அன்பு, பாசம், காதல் இவர்களுள், இவற்றுள் யாராய் , எதுவாய் இருப்பினும், நம்மை நாமாக வாழச்செய்கின்ற சூழலுடன் நம் பயணத்தை இனிதே தொடர்வோம்...

இதில் நிச்சயம் மாற்றுக்கருத்துக்கள் நம் ஒவ்வொருவருக்குள்ளும் எழலாம்... ஏனெனில் வாழ்க்கை என்பதே நம் ஒவ்வொரு உயிரின் தனிப்பட்ட அனுபவம் , தனிப்பாதை பயணம் அல்லவா ???? :-)


விரைவில் அடுத்த பதிவுகளுடன் ,
மீண்டும் ,
நான் :-)

Friday, December 31, 2010

2011

2010- நேற்று பிறந்தது போல தோன்றினாலும், இன்றோடு நம்மை கடந்துபோகப்போகும் காலம் என்னும் விருட்சத்தில் - ஒரு இலை. இந்த ஆண்டு நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்களை அள்ளித் தெளித்திருக்கிறது .

பலருக்கு இது ஒரு சராசரி ஆண்டாகருந்திருக்கலாம். சிலருக்கோ, அது மகிழ்ச்சியின் உச்சத்தில் திளைக்கச்செய்திருக்கலாம் . ஆனால் , சிலருக்கோ, இது சித்ரவதைகளின் மொத்த குத்தகையாய் துன்புறுத்தி இருக்கலாம்.

எது எப்படி கடந்திருந்தாலும், கழிந்திருந்தாலும் ஒவ்வொருவரின் ஆழ்மனதிலும் ஒரு புதுவித எதிர்பார்ப்பையும் , நம்பிக்கையையும், உத்வேகத்தையும், பழயன கழிதலோடு புதிய பல புகுதல்களையும் முன்னிருத்திக்கொண்டு நமக்காக காத்திருக்கிறது 2011 .

எத்தனை எத்தனையோ ஆசைகளை மனதில் தக்கவைத்துக்கொண்டு ஒவ்வொருவரின் இதயமும் , எதையோ ஒன்றை எதிர்நோக்கிய படி நாளைய 2011.


வேறுபடும் ஒவ்வோர் ஆசைகளுக்கும் உருவமும் வேறு. 2011 நமக்காக தரவிருப்பது எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் நாள் பட தேடிய வேலையோ, உயிருக்கு இணையாக விரும்பிய இதயமோ, வாழ்க்கையின் முக்கிய திருப்பங்களாகவோ , எதிர்பார்ப்புக்கு ஊதியமாய் உயர விரும்பும் நிலையோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நம்
ஒவ்வொருவரின் ஆசையும், எதிர்பார்ப்பும் , லட்சியமும் எதுவாக இருப்பினும் அவை அனைத்தும் இந்த இனிய புத்தம் புது ஆண்டில் நிறைவாக நிறைவேற இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் . மறைந்த ஆண்டோடு துன்பங்கள் மறையட்டும், பிறக்கும் ஆண்டோடு இன்பங்கள் பிறக்கட்டும் :-)

Thursday, April 22, 2010

முதல் பக்கம்

வணக்கம் நண்பர்களே..

மாறி வரும் காலச்சூழல்கள், விஞ்ஞான வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்களால், இன்று உங்கள் அனைவருடனும் நான் சேர்க்கப்பட்டிருக்கிறேன் ... பயணங்களில் பலரை சந்திக்கிறோம். ஆனால் சிலரின் சந்திப்புகள் மறக்க முடியாதவை.... இன்னும் சிலருடயதோ மறக்க கூடாதவை...

பரிமாற்றங்கள் , தடுமாற்றங்கள் , மனமாற்றங்கள் , ஏமாற்றங்கள் என்று எத்தனை எத்தனையோ மாற்றங்கள் ....ஏற்றுக்கொள்வது , விலகிநிற்பது, எதிர்த்து போரிடுவது என்று ஒவ்வொரு மனிதனின் எதிர்நோக்கும் தனித்தன்மையோடு அவரவரின் சூழலை ஒட்டியே அமைந்து விடுகிறது.

ஜெயிக்க , தோற்க , கற்க, சிரிக்க, அழ - என்று இவைகளுக்காகத்தான் இந்த உலகத்தில் தான் படைக்கப்பட்டிருப்பதாய் ஒவ்வொருவருக்குள்ளும் பல அனுமானங்கள்.

ஆனால் , உண்மையில் ஒவ்வொரு மனிதனும் இப்படி ஒவ்வொன்றை பற்றி கவலைப்பட்டே , தான் இந்த உலகத்தில் வாழ்வதற்காக படைக்கப்பட்டிருப்பதை மறந்து போகிறான். இறுதியில், வாழ்க்கை போராட்டத்தில் தொலைந்தும் போகிறான்.

எனவே, நான் பதிவு செய்ய விரும்புவது,நீ நீயாக இருப்பதே வாழ்க்கை . நாம் நாமாக வாழ்ந்திருப்போம் , இன்றைய நிஜங்களைத்தொலைக்காமல்.

என்றும் இணைந்திருப்போம் ......அடுத்த பதிவுகளோடு விரைவில் நான்.....